Monday, December 17, 2012

பிடித்ததும்... படித்ததும்...


பிடித்ததும்... படித்ததும்...  
        
       கார்நேசன் முடிவெடுத்துவிட்டான். ஒரு மாதம். அதாவது இன்றிலிருந்து சரியாக 30 நாட்கள். நினைக்கும் போதே சிறு தடுமாற்றம். நிறைவேற்றிவிடுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா என்ற மனப்போராட்டம்.

              இந்த கசப்பான முடிவின் பின்னணியில் சில பேர்வழிகளின் வசைபாடல்களும் கோரத்தாண்டவமும் மட்டுமே அணிவகுத்து நின்றது. இவையன்றி வேறெந்தவொரு நியாயமான காரணமும் வலு சேர்க்கவில்லை.

             'பழகப் பழக பாலும் புளிக்கும்' என்ற கூற்று பழமொழி என்பதையும் தாண்டி பழைய மொழி என்றாகிவிட்ட இக்காலத்தில் அளவுக்கதிகமாக பழகியதனால் தான் என்னவோ கூடுதலாக பிடித்திருந்தது. மறப்பதற்கு மனமில்லை. பிடித்ததை நினைக்காமல், பார்காமலிருப்பது எளிதல்லவே. இருந்தும் ஒரு முயற்சி.

                 துவக்கத்தில் பெரிய மாற்றம் நேருமென்ற உணர்வேதுமில்லை. போகப் போக  ஊனின்றி உறக்கமின்றி இடைவெளி குறைந்து இணக்கம் மிகுந்தது. விளக்கை அணைக்காமல் கண் அயர்ந்த நாட்களில் கனவில் தொடர்ந்த கதைகளும் உண்டு. நடு இரவு கடந்து அதிகாலை வரை நீண்ட பரிமாற்றங்களில் பல விடியல் பொழுதுகள் புலர்ந்ததும் உண்டு .

                   வீட்டிலுள்ளவர்களின் அர்ச்சனைகளும் நண்பர்களின் கேலியும் கிண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்க இசையவில்லை. பாவம்! அவர்களுக்கு எப்படி புரியும், அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புலப்படும் சுகம் அது.

             ஒரு நாளைக்கு 24 மணி நேரமென்பது அனைவருக்கும் பொதுவான நியதி. மணித்துளிகள் கரைந்தோடுவதும், சற்று அதிகமாக இருந்திருக்கலாமென தோன்றுவதும் இதிலகப்பட்டவர்களுக்கான இயல்பே. தடை செய்ததன் விளைவு, நேர்மாறாக இன்று ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்போல கழிந்தது.

             
                எள்ளளவும் கவனம் சிதறாமல்,மற்ற எதிலும் கவனமில்லாமல் சென்று கொண்டிருந்த பிரகாசமான  பாதை திடீரென்று இருட்டடித்தது. சில சமயங்களில், 'உன் வாழ்வு உன் கையில்' என்பதை கடைபிடிப்பவர்களை விட 'உன் வாழ்வு முடிந்தவரை பிறருக்கு சந்தோஷத்தை கொடுத்து சங்கடத்தை தவிர்க்குமானால் அதுவே சிறந்த அறம்' என்பதை பின்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறவர்களே அதிகம். அதிலிருந்து தானும் தப்பவில்லை எனினும் இந்த முயற்சி மறுப்பதற்கோ மறப்பதற்கோ அன்று, ஞாபகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பிறருக்கு புரிய வைக்கவும் கிடைத்த 
ஆயுதமென நினைத்தான் கார்நேசன் .

           
         நிரந்தரமாக இணைந்திருக்க தற்காலிகமான சிறு பிரிவு அவசியமென்பதை உணர்ந்தவனாய் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தடைவிதித்தது தனக்கு செய்த நன்மையே என்றும் அத்தடையை துவம்சம் செய்து முன்னேறுவதற்காகவும்  நம்பிக்கையோடு காத்திருந்தான்.
 
             காத்திருப்பு வீண்போகவில்லை. இதோ 15 நாட்களுக்குப் பிறகு வந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ஷ்டம். அவன் பெயரில் இரண்டு பார்சல்கள். ஒன்று லேசாகவும் மற்றொன்று கனமாகவும் இருந்தது.

            முதலில் லேசான பார்சலை பிரித்தபோது கனமான மகிழ்ச்சி மனதில் ஒட்டிக்கொண்டது. அவனது  கனவு வேலைக்கான ஆர்டர் அது.

            கனமான கவரில் இருந்த விஷயம் அவன் மனதை லேசாக்கியது. 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே' என்ற குறிப்போடு வந்திருந்தது புத்தகப் பார்சல். என்றோ ஒரு நாள் சிறுகதை போட்டிக்காக 'புத்தகக் காதல்' என்ற தலைப்பில் தன் அனுபவத்தை எழுதியதற்காக  இன்று தக்க நேரத்தில் கையில் கிடைத்தது  பரிசு.

           தனக்கு முற்றுக்கட்டை போட்டவர்களின் முகத்துக்கு நேராக வேலைக்கான ஆர்டரை கொடுத்துவிட்டு, அரை மாதமாக நிறுத்தி வைத்திருந்த புத்தகங்களுடனான சிநேகிதத்தை புதுப்பிக்க முனைந்தான்.
                   
             புத்தகத்தின் மேல்புறத்தில் சிறிய வண்ணத் தாளில் எழுதியிருந்த குறிப்பு கார்நேசனின்  வாழ்க்கையை புதிய பரிமாணத்தில் வண்ணமயமாக மாற்றக் காத்திருந்தது. மீண்டும் ஒரு முறை அக்குறிப்பை படித்தான் - 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே'.அது அவனது மூளையில் பலமுறை எதிரொலித்தது.  

!!!---!!!

Wednesday, August 8, 2012

THODARUM



தொடரும்

நான் எனது போலீஸ் படையுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்துவிட்டேன். அந்த சரியான தருணத்திற்காக காத்திருந்தேன்.

நான் - பாஸ்கரன் எஸ்.ஐ, கிரைம் பிரான்ச். கடந்த மூன்று மாதங்களை முழுக்கமுழுக்க செலவு செய்த்தது, சுந்தரத்தை பிடிப்பதற்காக மட்டும்தான். பல உளவுப் படைகளின் உதவிகளைக்கொண்டு இறுதியாக, நாகராஜன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுந்தரம் பதுங்கியிருக்கும் இடமென கிடைத்த தகவலின் பேரில் இரவு மூன்று மணிக்கு, முப்பத்து எட்டு பேர் கொண்ட போலீஸ் படையுடன் அந்த ஒற்றை வீட்டை சுற்றிவளைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வீட்டின் கதவை தகர்த்து உள்ளே சென்று பார்த்தபோது.. எனக்கு கிடைத்தது சில காலாவதியான செய்தித்தாள்களும், அவசரத்தில் அவன் விட்டுச்சென்ற அழுக்குத் துணிகளும், நிறைய ஏமாற்றம் மட்டும் தான்.

நிச்சயம் சுந்தரம் இங்கிருந்திருக்கவேண்டும். கொஞ்சம் முன்னம் வந்திருந்தால் சிக்கியிருப்பான். முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த இந்த 'நாகராஜன் கொலை' அத்யாயம் மீண்டும் தொடர்வதைக் கண்டு என்னை நானே நொந்துகொண்டேன்.

அன்று இரவு, என் வீட்டில் உறக்கம்கொள்ளாமல் பல சிந்தனைகளில் நான் ஆழ்ந்தேன்.

நாகராஜன் யார்?

தென்காசி மாவட்டம் வள்ளம், அவன் சொந்த ஊர். ஊர் டிரஸ்டியின் இரண்டாவது மகன். சௌகரியாமன இளமைப்பருவ வாழ்க்கை. திடீர் என்று நிகழ்ந்த அரசியல் தகராறில் மாஜி எம்.எல்.ஏ.கண்ண்ப்பமுதலியார், நாகராஜனின் அப்பா மற்றும் அண்ணனை குத்திக் கொல்ல, தற்காப்புக்காக கண்ணப்பனின் எதிர் அணியான ராமலிங்கத்திடம் தஞ்சம் அடைந்தான். கண்ணப்பனை எப்படியேனும் கொன்றுதீர்ப்பேன் என்று பலர் முன்னிலையில் சூளுரைத்தான்.

இருபது ஆண்டுகளில், ராமலிங்கத்தின் மறைவிற்குப் பிறகு, தனக்கென்று ஒரு படை திரட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து, ஜாதிக்கட்சியென வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்த நாகராஜன், இரண்டு ஆண்டுக்கு முன் கண்ணப்பனை கொலைசெய்யும் முயற்ச்சியில் இறங்கி, கண்ணப்பன் சென்ற காரில் குண்டு வீசி தன் தந்தையையும் அண்ணனையும் கொன்றதற்காக பழி தீர்த்துக்கொண்டான்.

பகைதீர்த்த உற்சாகத்தில் கம்பீரமாக சுற்றித்திரிந்த நாகராஜன், மூன்று மாதத்திற்கு முன், அவன் வீட்டிலேயே, அதிகாலை 5.30 மணிக்கு ஒரு முகம் தெரியாத ஆசாமியால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இது ஒரு சராசரி ரௌடியின் வாழ்கை வரலாறாக அன்றே முடிந்திருந்தால் எனக்கு இன்று எந்த சங்கடமும் இருந்திருக்காது.

நாகராஜன் இறந்த மூன்றாவது நாள், அவனது ஜாதிகட்சியினர், சுட்டவனை கோட்சே'வாகவும், நாகராஜனை மகாத்மா'வாகவும் உருவேற்றி, மாநிலம் தழுவிய போராட்டம் மேற்கொண்டு, அன்று விழுந்தது என் தலையில் இடி!

'போலீஸ் தூங்குகிறதா?' 'தலித்து மக்களுக்கு நீதி வேண்டாமா?' போன்ற போஸ்டர்கள் எனக்கு அளிக்கப்பட்ட கடமைக்கு அழுத்தம் சேர்த்தது. இது போன்று அழுத்தம் அதிகாமான நேரங்களில் நான் சந்திக்கும் ஒரே நபர், வக்கீல் கணேஷ்.

கணேஷ், “ஒவ்வொரு போலீஸ்கும் ஒவ்வொரு கேஸ் லைஃப் டைம் கேஸா அமையும். இது உனக்கு. எல்லா கார்ணர்ல இருந்தும் டார்கெட் பண்ணு. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன்”

கணேஷின் வார்த்தைகள் எனக்கு புது தெம்பை தந்தது. இந்த வழக்கில் என்னை முழுவதுமாக செலுத்திக்கொண்டேன். ஆரம்ப நாட்களில் பலர் என் சந்தேக வட்டத்தினுள் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் விலக, மிச்சம் இருந்தது சுந்தரம் மட்டும் தான்.

சுந்தரம் - கண்ணப்பமுதலியாரின் வளர்ப்பு மகன். ஆழமாக சென்று பார்த்ததில், கண்ணப்பனுக்கும் அவன் தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் பிறந்தவன். நாகராஜனை கொலை செய்ய சுந்தரத்திற்கு போதிய காரணம் இருக்கிறது. பழைய பகை. தன் தந்தையை கொன்றவனை தானே கொல்லவேண்டும். பழிக்குப்பழி. செய்துமுடித்தான்.

அன்று ஆரம்பித்தது இந்த வேட்டை. சுந்தரம் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரித்தேன். தன் இரையை குறிவைத்து, மூச்சுச் சத்தம் கூட வெளிவராமல் பதுங்கியிருக்கும் புலியைப்போல் அவன் மறைந்திருந்த வீட்டை நெருங்கினேன். எங்கோ தப்பு நடந்திருக்க வேண்டும். இந்த முறையும் கோட்டை விட்டாச்சு. ஓசி குவாட்டருக்காக நாட்டையே விற்றுவிடும் சில போலீஸ்காரர்கள் இருக்கும் வரையில் இது போன்ற ஏமாற்றங்களை ஜீரனித்துக்கொள்ளத்தான்வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் ஒரு மாதம் முயற்சித்தேன். இந்த முறை நிச்சயம் சுந்தரத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணிய மாத்திரத்தில் அறிவிக்கப்பட்டது தேர்தல் தேதி.

சரியாக நாற்பது நாள். அத்தனை கேஸ்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, முழுக்கமுழுக்க தேர்தல் வேலைகளில் இறங்க வேண்டி மேலிடத்து உத்தரவு. இந்த நாட்களில் வக்கீல் கணேஷும் கூட ஏதோ நடிகையின் கேஸ் விஷயமாக லண்டன் சென்றுவிட்டார்.

அதற்குள் அத்தனை அரசியல் தலைவர்களும் குலுக்கிய சீட்டுக்கட்டு கார்டுகளைப்போல் ஒவ்வொரு அணியில் கொள்கை பேதமின்றி இணைந்துகொண்டனர்.

என்னை வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். ஏறக்குறைய அத்தனை மாவட்டங்களிலும் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி, எதிர்பார்த்தது போல் எதிர்கட்சி வென்று, ஆளுங்கட்சி தோற்று..அனைத்தும் முடிந்து, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுந்தரத்தை தூசி தட்டினேன்.

என் வாக்கி-டாக்கி கீரிட்டது. என் மாவட்ட எம்.எல்.ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்வதாகவும், அவருக்கு பந்தோபஸ்துக்கு நான் செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. சுந்தரத்தை மேசைமேல் வைத்துவிட்டு அண்ணா சாலைநோக்கிச் சென்றேன்.

எதிர்பார்த்தபடியே சரியாக ஒன்றரை மணி நேரம் தாமதமாக, பெருத்த ஆராவாரத்துடன், ஆளுங்கட்சி கொடியேந்தி ஒரு பெருங்க்கூட்டம் வந்தது. எம்.எல்.ஏ'வும், கவுன்சிலர்களும், இன்ன பதவி என்று சொல்லமுடியாத எம்.எல்.ஏ'வுடன் கோஷமிட்டு வந்தோரும் சிலைக்கு மாலை அணிவிக்க, நான் கொஞ்சமும் எதிர்பாராத அதிர்ச்சி என்னை தாக்கியது. ஏழாவதாக மாலையிட்டது சந்தேகமேயில்லாமல் நான் தேடிக்கொண்டிருக்கும் சுந்தரம்.

நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. உடனடியாக ஸ்டேசன் சென்று மற்ற அதிகாரிகளை விசாரித்ததில், அவன் நாற்பத்து நாலாவது வார்டு கவுன்சிலர் ஆனது தெரியவந்தது. இது பற்றி மேலிடத்தில் அணுகியபோது அவன் ஆளுங்கட்சி எனவும், அவன் மீது உள்ள வழக்கை இப்போதைக்கு தொடவேண்டாம் எனவும் உத்தரவிட்டனர்.

இரண்டு நாட்கள் கழிந்தது. இன்னும் என் கோபம் குறையவில்லை. ஸ்டேசனில் எல்லோரும் என்னைப் பார்த்து நகைப்பது போன்று தோன்றியது. என்னால் ஸ்டேசனில் இருக்கமுடியவில்லை. வெளியே வந்து என் ஜீப்பில் அமர்ந்துகொண்டேன். வக்கீல் கணேஷ் ஊர் திரும்பியது ஞாபகம் வந்தது.


நான், “என்னமோ என் லைஃப் டைம் கேஸ்'னு சொன்னீங்களே. எப்படி முடிஞ்சு போச்சு பாத்தீங்களா? இந்த பேப்பர பாருங்க. ஃபோட்டோ போட்டிருக்கான். நான் சுந்தரத்துக்கு பாதுக்காப்பு கொடுத்துட்டிருக்கேன்... ச்சே... இந்த காக்கிச்சட்டைய போடறதுக்கே உடம்பெல்லாம் கூசுதுங்க. பேசாம வேலைவேண்டாம்னு எழுதிகொடுத்திட்டு எதாவாது பேங்க் வேலைக்கு அப்ளைபண்லாம்னு தோனுது.”

இத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டு சின்ன புன்னகையுடன் “கூல் டவுன் பாஸ்கர்”, கணேஷ்.

ஐம் கூல் கணேஷ். ஆனால்... என்ன இருந்தாலும் ஜஸ்டிஸ்'னு ஒன்னு இல்லாம போயிடுச்சேன்னுதான் வருத்தமா இருக்கு. அப்பட்டமா ஒரு கொலை செஞ்சவன் இப்ப நிம்மதியா சுத்திட்டு இருக்கானே. அவன யாருதான் தண்டிக்கிறது?”

கணேஷ் அதே புன்னகையை கொஞ்சம் பெரிதாக்கிக்கொண்டு தன் மேசைமேல் இருந்த நாளிதழை பாஸ்கரிடம் நீட்டினான்.

அதில் மாவட்டச் செய்தியில் மத்தியில் வாசித்தான். ' டாஸ்மாக் ஊழியர் படுகாயம்! குடிபோதையில் தாக்கிய இளைஞர் கைது!'

நான்,”இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?”

“அந்த குடிபோதையில் அடிச்சவன் வேற யாருமில்லை. நாகராஜனோட மகன். கவலைபடாம நீ வீட்டுக்குப் போ. உன் கேஸுக்கான ஜுட்ஜ்மென்டை இவன் பார்த்துப்பான். பழிக்குப்பழி தொடரும்!



----தொடரும்----




Monday, August 6, 2012

பொக்கிஷம்!


பொக்கிஷம்!

மண்ணைத் தோண்டி கடலின் தரைமட்டத்தில் புதையுண்டு கிடக்கும் தாதுக்களிலிருந்து, விண்ணைத் தாண்டி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் வரை இயற்கை மறைத்து வைத்திருந்த அனைத்து ரகசியங்களையும் கண்டறிந்து கைவசம் வைத்திருந்த மனிதன் வாழும் தற்போதைய நவீனயுகத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலியான என் பெயர் ரித்விக்.

தற்போது பள்ளியில் பயிலும் மாணவன். பின்னாளில், அறிவியல் சார்ந்த துறையில் உலகம் போற்றும்படியான சாதனை புரியவேண்டுமென்ற லட்சியம் மனதோரம் குடிகொண்டுள்ளது. எப்பவும் எனக்கு முதல் இரண்டு நண்பர்கள் அம்மாவும் அப்பாவும் தான். அவர்கள் இருவரும் விண்வெளி அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றுவதால், என்னுடைடைய இலட்சியத்தைப் பற்றி பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு தனியாக எத்தகைய காரணமும் தேவையில்லை.

ஒரு நாள் மாலைப் பொழுதில் பள்ளியில் இருந்து திரும்பிய நான், வழக்கமாக என்னுடைய வருகைக்காக ஆவலாக காத்திருக்கும் அம்மாவிடம் சென்று அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் இல்லை, அப்பாவுடன் சேர்ந்து ஷட்டில் விளையாடவும் செல்லவில்லை. ஒருவித மனக்குழப்பத்துடன், நேராக எனது அறைக்கு சென்று ஓய்வெடுக்க விரும்பி, ஜன்னலின் ஓரமிருந்த எனது 'டபுள் காட்'டின் மேல் படுக்கையில் ஏறி படுத்து கண்மூடினேன்.

வீட்டில் யாரவது ஒருவருடன் சின்னதாக சண்டை போட்டால் மட்டுமே செல்லமானதொரு கோவத்துடன் நான் இப்படி இருப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் நேற்றைக்கு அவ்வாறு ஏதும் நடக்காதபோதும் என்னுடைய இத்தகைய செயலுக்கு காரணம் புரியாமல் இருவரும் சற்று குழம்பி இருக்ககூடும், இருந்தும் எதையும் அத்தருணத்தில் பொருட்படுத்தத் தோணவில்லை.

எதிர்பார்த்தவாரே, என்னவாயிற்றோ என்ற பதற்றத்தில் என்னை காண வந்த அம்மாவும் அப்பாவும் நான் கூறிய காரணத்தை கேட்டதும் "ரித்து, ரொம்ப பயந்தே போயிட்டேன்! இதுக்கா இவ்வளவு பீலிங்?" என அம்மாவும் "சில்லி பாய், யோசி! ஒரு நல்லா ஐடியா கிடைக்கும்" என அப்பாவும் கூறியது, 'உன் ப்ராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ' என்பதை சொல்லாமல் சொல்லியதுபோல் இருந்தாலும், ஒரு விதத்தில் 'இது ஒன்னும் நீ நினைக்கிறது போல் கவலை படும்படியானதொரு விஷயமும் இல்லை. உன்னால் முடியும்!' என்று நம்பிக்கை தரும் விதமாகவும் அமைந்து என்னை சகஜ நிலைக்கு மாற்றியது.

நான் கேட்ட வார்த்தை மாயாஜாலத்தின் விளைவாக தெளிவுற்று எனது தேவையை பற்றி மட்டும் முழுமையாக யோசனை செய்யத்துவங்கினேன். சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தாத்தா பரிசாக கொடுத்த 'புத்தகம்'. " இது அசாதாரனமான அபூர்வமான ஒன்று. உன் ஆசைகள் - நிழலாக இருந்தாலும் சரி கனவாக இருந்தாலும் சரி, இதில் சேகரித்து வைத்து தேவைப்படும் போது நிஜமாக மாற்றிக்கொள்ளலாம். தக்க சமயத்தில் இது உனக்கு துணை புரியும்" என்ற அவரது வாழ்த்துக்கள் இன்று உண்மையாகவிருப்பது த்ரில் கலந்த சஸ்பென்ஸ்ஸான சூழ்நிலையை உருவாக்கியது.

கொஞ்சம் விருவிருப்புடனும் பரபரப்புடனும் என்னுடைய அறையை புரட்டிப்போட்டு தேடியபோது, கப்போர்டின் மேல் அடுக்கில்,அழகாக கிப்டு பேப்பர் சுற்றிய அட்டைப்பெட்டியினுள் இருந்து, சிப்பிக்குள் இருக்கும் முத்தை தேடி எடுப்பதை போல் அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன். ஒரு விதத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் இந்த புத்தகம் முத்தை விடவும் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக மாறக் காத்திருந்தது .

காலையிலிருந்து என்னை துளைத்துக் கொண்டிருந்த கேள்விக்கான சரியான விடை இதுவன்றி வேறொன்றுமில்லை. வகுப்பறையில் "அன்றாடம் இயற்கையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக பிற்காலத்தில் மனித சமுதாயத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும், உலக அழிவிற்கு வித்தாகவும் அமையக்கூடும். அப்படியிருக்க இன்றைக்கு உள்ள நிலையிலாவது இயற்கையை பாதுகாத்து வருக்காலத்தினருக்கு ஒப்படைக்க ஒவ்வருவரும் என்ன செய்ய போகிறீர்கள்? புதுமையான அதே நேரம் செயல் படுத்தகூடியதுமான ஒரு விடை தான் எனது எதிர்பார்ப்பு" என ஆசிரியர் எழுப்பிய புதிருக்கு பதில் என் கைக்குள் இருந்தது.

இந்த புத்தகத்தை இருக்க அணைத்தவாறு, முதலில், இயற்கையின் எந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விக்குறியுடன் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்த நொடியில் புலப்பட்ட நிஜம் - இரவு நேரத்தை குறிக்கும் கரிய நிறம், மேக கூட்டத்தினுள் தனது பாதி முகத்தை மறைத்து மீதி முகம் தெரியும் படி என்னை பார்த்து சிரித்த நிலாப் பெண், வானமெங்கும் சிதறிக்கிடந்து கண்சிமிட்டும் நச்தத்திரங்கள் - இந்த மூவர் கூட்டணி கொள்ளைகொள்ளாத மனமே இருக்க முடியாது. ஆதலால் முதல் பாதுகாப்பு இவற்றிற்கே.

மெதுவாக ஜன்னலின் வெளியே கையை மேல் நோக்கி நீட்டி இரவின் இருளை கை நிறைய அள்ளி சிந்தாமல் சிதறாமல் புத்தகத்தின் முதல் பக்கம் முழுவதும் தடவினேன். பின்னர், ஒரு கண் மூடி, இரு விரலை விரித்து, நிலவை அளவெடுத்தேன். விரலுக்குள் அடங்கிய நிலவை பத்திரமாக வானிலிருந்து பிரித்து எடுத்து பக்கத்தின் நடுவே ஒட்டினேன். அடுத்ததாக முடிந்த அளவு இரு கைகளிலும் நச்சத்திரங்களை அள்ளி, தனித்திருந்த நிலவுக்குத் துணையாக பக்கம் முழுதும் தூவி முடித்து பார்த்த பொழுது, சற்று முன் வெளியே தூரத்தில் தெரிந்த இரவு வானத்தை விட தற்போது கையிலிருந்த இரவு மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததை நம்ப முடியாமல், வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன்.

எனது ரசனை என்னும் தெளிந்த நீரோட்டத்தில் கல் எரிந்து கவனச்சிதறல் என்னும் நீரலைகளை உண்டாக்கியது, "ரித்து அங்கே என்ன செய்ற? இங்க ஒரு நிமிஷம் வந்து பாரேன்!" எனது அம்மாவின் பாசமான குரல். கீழே இறங்கி, சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடிய நான் நின்றது எங்கள் வீட்டின் பால்கனியில். அம்மா அப்பா இருவரும் வியந்து பேசி ரசத்துக்கொண்டிருந்தது நான் பார்த்து மகிழ்ந்த அதே காட்சியை தான்! "என்றுமில்லாமல் இன்று நிலா சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது!", "என்ன காரணம்னு தெரியல ஆனால் பார்பதற்கு ரொம்ப ரொம்ப அழகாக, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது" மாறி மாறி நிலவிற்கு புகழாரம் சூட்டிய தருணத்தில் கரண்ட் கட் ஆக, அந்த நிமிடம் எங்கள் அனைவரின் ரசனைக்கு மேலும் மெருகேற்றியது.

"இப்போ நாம சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?" அம்மா கேட்க, "செம ஐடியா! ரித்விக், கெட் மீ தி டிஜி கேம்" அப்பா சொல்ல, இப்படியொரு சந்தர்பத்தை மிஸ் பண்ண விரும்பாத நானும் விரைந்து சென்று கேமராவுடன் திரும்பினேன். சிரமப்பட்டு செட்டிங்க்ஸ் எல்லாம் மாற்றி - 'டே லைட் மோட்', 'ஆட்டோ க்ளிக்' என பலவற்றை அட்ஜஸ்ட் செய்து கரெக்டான ஆங்கிள்ல போகஸ் செட் செய்துவிட்டு வந்து என்னுடனும் அம்மாவுடனும் நின்றுகொண்டார் அப்பா. அவர்கள் இருவரும் அருகருகே நிற்க, அவர்களுக்கு முன் நின்ற எனது கழுத்தை சுற்றி தனது இரு கைகளையும் கோர்த்து தனது பக்கம் சிறிது இழுத்த அம்மாவின் செய்கையை பார்த்த அப்பா என் தோள் மீது ஒரு கையும் அம்மாவின் தோள் மீது ஒரு கையும் வைத்து அணைத்துக் கொண்டார். சமயோஜிதமாக செயல்பட்ட நடவடிக்கைக்காக அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க, இந்த ஆர்பாட்டத்தை பார்த்து பின்னயிலிருந்த நிலவும் சிரிக்க, நான் மட்டும் கையிலுருந்த பொக்கிஷம் தெரியும்படி கேமராவை நோக்கி கண்ணடித்து, 'தம்ப்ஸ் அப்' போஸ் காட்டி புன்னகைத்தேன். இது தான் பெர்பெக்ட்டான டைமிங் என்ன தனக்குத்தானே முடிவெடுத்த கேமராவும் சரியாக அந்த நொடியில் போட்டோவை பதிவு செய்தது.

அம்மாவும் அப்பாவும் நிலவை நோக்கி தங்களின் வர்ணனயை தொடர்ந்தவாரே எடுத்த நிழற்படத்தை ரசித்துக்கொண்டிருக்க, நானோ பொக்கிஷத்தின் முதல் பக்கத்திலிருந்த நிஜமான படத்தை ரசிக்கலானேன். இதே போல் வருக்காலத்தினரும் இயற்கையை மாசில்லாமல் ரசிக்க வழிவகுத்ததை எண்ணி மெய் சிலிர்த்தேன்!

!!!---!!!