Sunday, June 16, 2013

அவள்... அவன்...

                                                    அவள்... அவன்...

சில்லென்ற தென்றலும், பனிக்கட்டியை  உருக்கி தெளித்தது போன்ற பிரமையை ஏற்படுத்திய நவம்பர் மாத மழைச்சாரலும், நடுஇரவு நிசப்தமும், அதனை கலைக்கும் விதமாக சற்றே அதிர்ந்து கொண்டிருந்த புதுப்பாடல் மெட்டுக்களையும் ரசித்தவாறு 'அவன் மனம் விரும்பும் அவளும்' அருகிலிருக்க, அரை மணிநேர பயணம் அரை விநாடியாக கரைந்தோடியது  அஷ்வினிற்கு.  நடுஇரவைத் தாண்டி அதிகாலையை எதிர்நோக்கிய ரம்மியமான சூழலை அவளும்  ரசித்தாள். இருந்தும் ரசனையை மீறிய எதிர்பார்ப்பு உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்ததனால்  பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் இந்த சூழல் அவளிடம் ஏற்படுத்தவில்லை. அஷ்வினிற்கு அவளின் அமைதி புதிதாக, புரியாத புதிராக இருந்தது.

ஏர்போர்ட்டினுள் நுழைந்ததும்  சட்டென்று நின்றது கார். தற்காலிகமாக நினைவளைகளுடனான  சண்டையை நிறுத்தி தன்னிலை உணரவைத்தது அஷ்வினுடைய அன்பான ஸ்பரிசம். சுற்றி பார்வையை செலுத்தியவள் தனக்காக காரின் கதவை அஷ்வின்  திறந்ததையறிந்து தட்டுத்தடுமாறி  கீழே இறங்கியதும்,  தானும் கீழிறங்கி புன்னகையுடன்  ஓரிரு வார்த்தைகள்  கூறி கையசைத்து அவள் உள்ளே போகும்வரை காத்திருந்து அனுப்பிவிட்டு, கைகடிகரத்தில் மணி 1:30 என பார்த்தவனுக்கு இன்னும் சரியாக ஒரு மணி நேரத்திற்குள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்னும் ஞாபகம் வரவே பிரிய மனமில்லாமல் தன்னுடைய காரில் விரைந்தான் அஷ்வின் .

வெளி உலகின் இரவு சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு ஒளி வெள்ளத்தால் பகலைப்போல காட்சியளித்த ஏர்போர்ட்டின் உட்பகுதி மிகுந்த பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. அந்த பரபரப்பை மிஞ்சும் குதூகலத்தோடு தேடல் படலத்தை மேற்கொண்ட அவளது பார்வை நிலைகொண்டது தொலைவில் பயணியர்  இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மீது. அவளின் மனதில் சட்டென்று  ஊடுருவிய நிகரில்லா மகிழ்ச்சியானது இதழ்களில் சிரிப்பாக வெளிப்பட்டது . மெதுவாக அவனருகில் சென்றவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். கண்களை மூடி 'ஐ- பாட்' டில் இசையை ரசித்துக்கொண்டிருந்தவாறு அவளுக்காக காத்திருந்தவனின் உள்ளுணர்வு அவளது வருகையை அறிவுறித்தியதோ என்னவோ! நொடியில்  கண்களை திறந்தவன் நேராக அவளது விழிகளை நோக்கினான்.

அவள் - சாஹித்யா. அவன் - சித்தார்த்.

ஆச்சரியத்தில்  "ஹாய் சாஹி..." வார்த்தைகள் வெளிவருவதற்குள், குறும்பு புன்னகையுடன் அவனது கைகளை குலுக்கி, அவனுக்காக வாங்கி வந்திருந்த ஸ்வீட்(டை) சர்ப்ரைஸாக உள்ளங்கையில் திணித்து  "ஹாய் சித்தார்த்! எப்படி இருக்க? எப்ப வந்த? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? ஏதாவது சாப்பிடுறியா?  ஹவ் அபௌட் எ காஃபி?" பதிலுக்காக காத்திருக்காது கேள்விகளை அடுக்கியவளை போதும் போதும் என்று கையுயர்த்தி செய்கையால் நிறுத்தியவன்  "ஒரு ப்லசன்ட் ஷாக் ஆக்சுவலி!  ஐம் பைன்! மாம் அண்ட் டாட் ஆல்சோ பைன் அஸ் வெல்" மெதுவாக யோசித்து பதிலளித்தான் எனினும் அவளது விழிகளின் மீது உறைந்திருந்த தன் பார்வையை அகற்றவில்லை.

அவனது கண் சிமிட்டாத பார்வையின் அர்த்தம் புரியாமல், ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி கேள்விகணை  தொடுத்தவளுக்கு "சாஹித்யா தேங்க்ஸ் பார் டெம்ப்டேஷன் சாக்லேட்! நீ இன்னும் மாறவே இல்ல! அதே மூச்சு விடாம பேச்சு, அதே பளீச் புன்னகை, அதோடு  நம்ம டீல் - எப்ப மீட் பண்ணாலும் அது டெம்ப்டேஷன் சாக்லேட்டோட தான் என்பதை நீ மறக்கல. பாரு நான் மறந்துட்டேன்" வருந்தியவனிற்கு டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்துவிட்டு  "சித்தார்த், நீ கூட தான் இன்னும் மாறவே இல்ல!" ஒரு சின்ன பாஸ் விட்டு தொடர்ந்தாள்  .

"அதே பெர்சனாளிட்டி, அதே நிதானமான இங்கிலிஷ் அக்சென்ட் பேச்சு, அதே ஹேர் ஸ்டைல், அதே மறதி அண்ட் அதே பார்மல் டிரஸ்ஸிங். ஆனா... இப்போ இன்டர்வியு அட்டென்ட் பண்ணபோகல, அட  பொண்ணு பாக்க போவதற்குகூட பிளான் எதுவும் இல்லையே! அப்படியிருக்க  டிராவலிங்லயும் இந்த ஷு சாக்ஸோட ஃ பார்மல் டிரஸ்ஸிங் கொஞ்சம் இல்ல சித்தார்த ரொம்பவே ஓவர் தெரியுமா? பரவாயில்லை, நீ இந்த அவுட்ஃ பிட்ல ரொம்ப இல்லைனாலும்  ஓரளவிற்கு ஹேன்ட்சம்மா  தெரியிரதால நான் உன்ன மன்னிச்சு விடுறேன்."  என்ற சாஹியின் கிண்டலான பதிலுக்கு இருவரும் தங்களை மறந்ததோடு மற்றவர்களையும் மறந்து சத்தமாக சிரித்தனர்.

 "அவ்ளோதானா? வேறெதுவும் இல்லையா?? என்ன பத்தின காம்ப்ளிமண்ட்ஸ் ஏதாவது???" என இந்த முறை அவளின் கேள்விகணை முடியாமல் தொக்கி நின்றதன் அர்த்தம் அவ்வளவு சீக்கிரத்தில் புரியவில்லை சித்தார்த்திற்கு. "வேறென்ன?" என்றவனுக்கு "அதுசரி. இப்படி இருந்தால் தானே நீ சித்தார்த்!" என்று மனதில் திட்டியதை கஷ்டப்பட்டு மறைத்து "சாஹித்யா..... புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு! நீ அழகா இருக்க! இப்படி சின்னதா ஒரு பொய் கூட சொல்லத்தோனலையா" சட்டென்று முடித்தாள். "வாவ்! ஃ பர்ஸ்ட் டைம் ஐம் சீயிங் யூ இன் சாரீ. யூ லுக் ப்ரிட்டி கார்ஜியஸ் சாஹி!!! ஐம் டேம் சீரியஸ் நவ்!" என்றான் சித்து. அவனது கூற்று உண்மையா அல்லது சாஹி சொன்னது போல் சிறியதொரு பொய்யா? இது 100% நிஜமான உண்மையே! நிஜமும் உண்மையும் ரெண்டும் ஒண்ணுதானே என்கிறீர்களா?!? எது  எப்படியோ அதை சித்துவிடமிருந்து வெளிக்கொணர  படாதபாடு பட்ட சாஹித்யாவிற்கு அழுத்தமான அங்கீகாரம் தரவேண்டியே இப்படி.

 சித்து  "சாரீ கட்டும் போதுதான் பொண்ணுங்க பொண்ணுங்களாக தெரியுறாங்க" என்று அடிக்கடி சாஹியிடம் கூறுவான். சாஹிக்கு சாரீ அவ்வளவு கம்போர்டபுள் இல்லைனாலும் இன்று ஒருநாள் சிட்துவிற்காக ட்ரை பண்ணினாள். அதோட அவுட்கம்  ரொம்பவே பாசிட்டிவ்வாக இருந்ததில் மகிழ்ச்சி. உண்மையில் காம்ப்ளிமண்ட்ஸ் எதுவாயினும் போட்டு உடைகிற மாதிரி சொல்லி விடுவதே சித்து ஸ்டைல்.  இப்பவும் அப்படித்தான்! கண் இமைக்காமல் அவளின் விழிகளையே நோக்கி இருந்ததற்கு காரணம் இதுவே. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தபோதும்  இதுதானென்று தெளிவாக புரிபடவில்லை. என்ன செய்வது கடைசியில் போட்டு வாங்க வேண்டியதாயிற்று.

 இவ்வாறு சகஜமாக  இருவரும் பேசிக்கொள்வதை பார்கையில் என்ன தோன்றுகிறது? சாஹி-சித்து ரொம்ப நாள் பழக்கமாக இருக்கும் என்று தானே? கரெக்ட்தான் ! பாயிண்ட்டுக்கு வந்தாச்சு. இனி தொடர்வோம்.

 நடக்க ஆரம்பித்ததிலிருந்து இல்லைனாலும், படிக்க ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்க. ஆமா... யெஸ்... அ..னா... ஆ..வன்னா... கற்க துவங்கிய காலத்திலிருந்து தான். எப்படின்னா...? அவங்க பெயர்  தான் முக்கியமான காரணம். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. ஒரே ஸ்கூல்...ஒரே க்லாஸ். இருவரின் பேரையும் சொல்லிப்பார்த்தால் - சா...ஹி...த்...யா! சி...த்...தா...ர்...த்! அதனால roll no.,reg no.,serial no.,alphabetical order என எந்த ஆர்டர்லயும் சாஹித்யா ஃபர்ஸ்ட் அண்ட் சித்தார்த் பாலோஸ் நெக்ஸட்!


ஸோ, அந்த காலத்து நட்பு.  இது நாள் வரையிலும் நட்புக்கு இலக்கணம், இலக்கியம், செய்யுள், கட்டுரை, முன்னுரை, முடிவுரை என முற்றுப்புள்ளி இல்லாமல் நீழும் அனைத்து முன்னுதாரணஙளாகவும் திகழ்கின்றனர் என்பதெல்லாம் இக்காலத்தில் வேலைக்கு ஆகாத ஒப்பீடுகள். 

 பலமான அதே சமயம் இவர்களின் நட்பிற்கு பாலமாக இருப்பது 'அண்டர்ஸ்டான்டிங்' மட்டுமே. ஒருவரை பற்றி மற்றொருவர் ஆழமாக புரிந்து வைத்திருந்தனர். ஆதலால்  பெரும்பாலும் இவர்களுக்குள் சண்டை வராது. அப்படியே தப்பித்தவறி வந்துவிட்டால்? இன்று சண்டை நாளை சமாதானம் என்ற பேச்செல்லாம் செல்லாது, குறைந்தது ஒரு வாரத்திற்காவது பேச்சு வார்த்தை இருக்காது. யார் பக்கம் தவறோ அதை உணர்ந்து 'சாரி' சொன்ன பின்னர் தான் சமாதான உடன்படிக்கை.

இதென்னவோ 'ஈகோ' ப்ராளம் மாதிரி தோன்றுதே என்றால் முற்றிலும் தவறான யூகம்.  நட்பிற்குள் 'சாரி & தேங்க்ஸ்' தேவையில்லை என்பதை மாற்றி தாரளமாக 'சாரியும் தேங்க்ஸ்யும்' பரிமாறிக்கொள்ளப்பட்டது இருவருக்குமிடையில். பரிமாறிக்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஜாலியான விஷயம் 'விஷ்ஷஸ்' அதாவது வாழ்த்துக்கள். பெர்த் டே , ஃப்ரண்ட்ஷிப் டே ல ஆரம்பிச்சு மதர்'ஸ் டே, பாதர்ஸ் டே கடந்து வுமென்'ஸ் டே, மென்'ஸ் டே தாண்டி எர்த் டே, வாட்டர் டே என ஏறக்குறைய 365 நாளும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு விஷ் பண்றது இருவருக்கும் இஷ்டமான ஒன்று. இதெல்லாம் ஜெனரல் நாலேஜ் அப்டேஷன்காகவும் தான் பாஸ்!

ஸ்பெஷல் அக்கேஷன்ல பெர்த்  டே அல்லது பெஸ்டிவல் நாட்கள்ல   சர்ப்ரைஸ் கிப்ட், ட்ரீட் எல்லாம் பழைய ஸ்டைல். அடுத்த நாள் அல்லது சிறிது  நாள் கழித்து, எது அப்போதைய தேவையோ அல்லது அவங்களோட ஆசைப்படி ரொம்ப நாள் வாங்கணும்னு நினைத்த ஒரு பொருளை ப்ரெசண்ட் பண்றது இவங்களோட ட்ரென்ட்!

 இப்படியெல்லாம் இருந்தாலும் வீடு, காலேஜ், லைப்ரரி தவிர வேறெங்கும் இருவரையும் ஒன்றாக காண முடியாது. "ஒரே மூஞ்சிய எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? போர் அடிக்காதா??" என்ற விளக்கம் இதன் பின்னணியில் இருவர் தரப்பிலும். நிஜத்தில் இருவரும் சுதந்திரமாக  தங்களது 'கமிட்மென்ட்ஸ்'க்கு நேரம் ஒதுக்கி செயலாற்றினார்.  

ஆரம்பம் முதல் ஒன்றாகவே இருப்பதாலோ என்னவோ இருவரின் 'மைன்ட் செட்டும் தின்க்கிங்கும்' தராசில் வைத்து நிறுத்தது போல எப்பவும் ஒருசேரத் தான் இருக்கும்.  ஸ்கூல் முடிச்சு காலேஜ். காலேஜ்ல யு.ஜி சாய்ஸ் ஒரே டிபார்ட்மென்ட், முடிச்சதும் எம்.பி.ஏ க்கு அப்ளிகேசன் என எல்லாம் சொல்லிவைத்ததை போல் ஒன்றாகவே நிகழ்ந்தது. சதியா இல்லை விதியா என்று தெரியவில்லை சாஹியின் எம்.பி.ஏ கனவு தொடரவில்லை. அவள் வேறு துறையில் மேற்படிப்பை தொடர்ந்தாள். சித்துவிற்கு மட்டுமே எம்.பி.ஏ சாத்தியப்பட்டது. இப்பொழுது இரண்டு வருட படிப்பும், பிரிவும்  உருண்டோடி படிப்பிற்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று.

இத்தனை இருந்தாலும் இருவருக்கும் ஒத்துப்போகாத குணநலன்கள் எண்ணிலடங்காதவை.ரெண்டு பேரும் இரு வேறு துருவங்கள். opposite pole attracts என்பதனால் தான் என்னவோ ஒட்டிக்கிட்டாங்க.

சித்து மாடர்ன் பையன் - சாஹி ட்ரடிஷனல் பொண்ணு.சித்து ரொம்பவெ  பிராக்டிகல் - சாஹி ரொம்பவே சோசியல். சித்து ஒரு 'ஓபென் புக்' - சாஹி             'ஸெல்ப் சென்ட்ர்ட்'.  ' பேஷன் அண்ட் இண்ட்ரெஸ்ட்' க்கு நீண்ட லிஸ்ட் இருக்கும் சித்துவுக்கு - சாஹி ஆல்மோஸ்ட் செய்வது எல்லாமே பிடித்திருந்தால் மட்டுமே, பலவற்றையும் பிடித்ததாக மாற்றிக்கொள்வாள். சித்து 'ஷார்ட் டெம்பர்ட்' - சாஹி பொறுமையின் மறு உருவம். சித்து 'ஜஸ்ட் லைக் தட்' னு வாழ்க்கையை என்ஜாய் பண்றான் - சாஹி வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று 'ஸ்டான்டர்ட்'ஆ  பிக்ஸ் ஆயிட்டாள்.  சித்து விற்கு ப்ரெண்ட்ஸ் கேங் உண்டு, ஆனால் 'ரிலேஷன்சிப்' ல அவ்வளவா நம்பிக்கை இல்லை - சாஹிக்கு ப்ரெண்ட்ஸ் தான் எல்லாமே. அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக, நட்போடு இது வரை வந்ததற்கு காரணமாக அமைந்ததும் இந்த கடைசி கருத்தாகவே இருக்கவேண்டும் .

சாஹிக்கு சித்து பத்தின எல்லாமே அத்துப்பிடி. சித்துவிற்கு சாஹி தன் குடும்பத்தில் ஒருத்தி போல. அப்படிஇருக்க இருவரின் கருத்துப்படி "லவ் இஸ் நாட் எ ஃபாண்டஸி ஆர் சம்திங்க் டு பி ஃபாஸினேடெட்"  என்பதால் அவர்களுக்குள் மன சஞ்சலமின்றி ஒருமித்து பயணிக்க முடிந்தது. அதில் இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது என்பது தானே கிளைமாக்ஸ்.

சித்து எம்.பி.ஏ முடித்து கனடாவிற்கு செல்கிறான் பணியில் சேர. ஒரு மணிநேரம் அவர்களுக்கு போதவில்லை இரண்டு வருட கதை பேசிமுடிக்க.
மணி 2:30 ஆகிவிட்டது. சரியாக 3:30 க்கு சித்து விற்கு ப்ளைட். அஷ்வின் திரும்பி வந்தாயிற்று சாஹியின் அம்மா, அப்பா மற்றும் சாஹி-சித்துவின் நண்பர்களோடு.

சாஹிக்காக சித்து வலை வீசி தேடிப்பிடித்த மாப்பிள்ளைதான் அஷ்வின். அவளுக்கு பிடித்தவாறு இருக்க வேண்டுமென்று சித்து மிகவும் சிரத்தை எடுத்து கண்டுபிடித்திருந்தான், தங்கள்  இருவருக்கும் பிடித்ததை விட்டுக்கொடுக்கப் போகிறோம் என்ற நிலையறியாமலேயே. சாஹிக்கும் அஷ்வினை பிடித்திருந்தது - அவன் சித்துவின் செலெக்க்ஷன் ஆயிற்றே!

சாஹி-சித்து என்பதே இத்தனை காலமும் இவர்களுடைய ஜெபமந்திரமாக இருந்தது, ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைபார்களே தவிர போடா-போடி என்று ஒருபோதும் அழைத்ததில்லை. காரணம் தங்களுக்கு வரப்போகும் ஒருவனை/ஒருத்தியை மட்டுமே செல்லமாக அவ்வாறு அதட்டுவது என்று தங்களுக்குள் முடிவெடுத்திருந்தனர்.

புறப்பட வேண்டிய நேரமாயிற்று. சித்து அனைவரிடமும் விடைபெற்று போர்டிங்காக உள்ளே செல்ல ஆயத்தமானான். அவனையும் அறியாமல் "சாஹி ஐ மிஸ் யூ டீ!" என கை குலுக்கிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று மறைந்தான். அதன் அர்த்தம் புரிந்து திடுக்கிட்டவளாய் " ஐ மிஸ் யூ டூ டா சித்து!"  என்று பதிலுக்கு அவனிடம்  சொல்லமுடியாததனால் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

ஒருவரை மற்றொருவர் நன்றாக புரிந்து கொண்டதால் என்ன பயன்? தங்களை தாமே  இருவரும் புரிந்து கொள்ள இத்தனை வருடங்கள் ஆனது. ஆனால் பிரியும் தருவாயில்  நொடிப்பொழுதில்  தன்  உள்ளத்தில் மறைந்திருந்த அன்பை சொல்லாமல் சொல்லிய கண்ணீரை துடைக்க மனமில்லாமல் சித்துவையே  பார்த்தபடி  சிலையாக நின்றிருந்தாள் அவனை மறுபடி பார்க்கப்போகும் நாளை எதிர்நோக்கியவளாய்.

!!!---!!!
 

No comments:

Post a Comment